கடும் வறுமைக்கு மத்தியில் வரலாற்று சாதனை படைத்த மாணவி : மைத்திரி கொடுத்த பரிசு!!

215


 
கடும் வறுமையான நிலையிலும் ஐந்தாம் தர புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி பி.டி.துலாஞ்சலி மதுமாலி பிரேமரத்னவை ஜனாதிபதி நேற்று சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மாணவிக்கு ஒரு வருடத்திற்குத் தேவையான பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கினார்.



மாணவியை சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்த ஜனாதிபதி நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்து பேசியிருந்தார்.

இதன் போது மாணவியின் திறமையைப் பாராட்டிய ஜனாதிபதி, அவரது உயர்கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும்வரை மாதாந்தம் 3000 ரூபாவை வழங்குவதாக உறுதியளித்தார்.



மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச, மாணவிக்கு புதிய வீடொன்றை அமைத்துக்கொடுப்பதற்கு ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.



இந்நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவி கல்வி பயின்ற பாடசாலையின் அதிபர், கலேவெல வலயக் கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாரச்சி, துலாஞ்சலி மதுமாலி பிரேமரத்னவின் தாயார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


இதேவேளை, கலேவல கல்வி வலயத்தின் பஹல திக்கல ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 45 வருடங்கள் ஆகின்றன. தற்போது பாடாசலையில் 96 மாணவர்கள் உள்ளனர்.

இப்பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரேயொரு மாணவி பி.டி.துலாஞ்சலி மதுமாலி என்பது குறிப்பிடத்தக்கது.


தந்தையை இழந்து உரிய வீட்டு வசதியுமின்றி மிகுந்த பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் துலாஞ்சலி மதுமாலி 168 புள்ளிகளைப்பெற்று இம்முறை 05ஆம் ஆண்டு தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.