அவுஸ்திரேலிய வீரர்களின் பேருந்து மீது தாக்குதல்: பொறுப்பாக இருங்கள் என அஸ்வின் ஆவேசம்!!

413

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள பாரஸ்பரா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து விடுதிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் பேருந்தின் கண்ணாடியில் ஒன்று உடைந்து சிதறியுள்ளது. எதிர்பார்க்காத தாக்குதலை அடுத்து அவுஸ்திரேலிய வீரர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் தாக்குதலுக்கு உள்ளான பேருந்தின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளாரான அஸ்வின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நமது நாட்டிற்கு வரும் விருந்தினர்களை மதிப்பு, மரியாதையுடன் வரவேற்கும் பண்பு கொண்டவர்கள் நாம். அவுஸ்திரேலியா அணி பஸ் மீது கற்களை வீசியது மிகவும் மோசமான செயல். பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். நம் மக்களிடம் நிச்சயமாக இந்த பண்பு நிறைய உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.