வவுனியாவில் கைகுழந்தைகளை பயன்படுத்தி வியாபாரம் செய்த 5பேர் பொலிசாரால் கைது!!

437


 
வவுனியா நகர்ப்பகுதியில் ஊதுபத்தி பொருட்கள் விற்பனையில் பல மாதங்களாக சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 5பேரை இன்று (12.10) இரவு 7 மணியளவில் குடியிருப்பு பூங்கா வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கடந்த பல மாதங்களாக புத்தளம் பகுதியிலிருந்து வவுனியா நகர்ப்பகுதிகளில் ஊதுபத்திகளை வீதியோரங்களில் விற்பனை செய்து வருவதாக வவுனியா உதவிப்பிரதேச செயலாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.



இதையடுத்து அவர்களை அவதானிப்பதற்குச் சென்ற வவுனியா உதவிப்பிரதேச செயலாளர் இன்று மாலை சிறுவர்களுடனும் இரண்டு மாத கைக்குழந்தையுடனும் குறிப்பிட்ட நபர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானித்து, உடனடியாக இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து குடியிருப்பு பூங்கா வீதியில் வைத்து இன்று இரவு பொலிசாரினால் ஒரு கைக்குழந்தை உட்பட 4 சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இவர்களின் பாவனைக்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கில், முச்சக்கரவண்டி என்பவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர்கள் ஒரு கூட்டாக செயற்பட்டே இவ் வியாபரத்தை மேற்கொண்டு வந்தமை தெரியவந்துள்ளது. இவர்கள் மீது சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வழங்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசாருடன் இணைந்து சிறுவர் மற்றும் மகளீருக்கான பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.