வவுனியாவில் பூரண கர்த்தால் : இயல்பு நிலை முடங்கியது!!

416

 
தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, அநுராதபுரம் சிறையில் சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்,

முழுத் தமிழ் அரசியற் கைதிகளையும் ஓர் அரசியற் தீரமானத்தினூடாக விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும், எதிர்வரும் 14.10.2017, சனிக்கிழமை, யாழ்ப்பாணம் வருகை தரவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தாமதமற்ற தீர்வு காண வேண்டிய இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்குமாக இன்று (13.10.2017) வடக்கு மாகாணம் முழுவதும் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வவுனியாவிலும் இன்று (13.10.2017) கடையடைப்பு செய்து பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

வியாபார நிலையங்கள் அனைத்தும் மூடியுள்ளதுடன், தினச்சந்தை, பஸ் நிலையம், பிரதான வீதிகள், வங்கிகள், அரச நிறுவனங்கள் பொது மக்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பொலிஸார் வீதிகளில் கடமைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் வெளியூர் சேவைகளின் மாத்திரம் ஈடுபட்டு வருகின்றன. வீதிகளில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றது.