தலைமுடியைத் தின்னும் விசித்திர பழக்கம் உடைய பெண்ணின் வயிற்றில் இருந்து, மயிர்ப் பந்துகளை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றினர்.
முப்பத்தேழு வயதுடைய இந்தப் பெண்ணுக்கு தலைமுடியைத் தின்னும் ‘ரெப்யூன்செல் சிண்ட்ரோம்’ (Rapunzel syndrome) என்ற வியாதி இருந்து வந்துள்ளது.
நீண்ட காலமாக தலைமுடியைத் தின்னும் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்த இவர், அண்மைக்காலமாக உணவு உண்ட உடனேயே வாந்தியெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதையடுத்து இவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், இப்பெண் குறித்த வியாதிக்கு ஆளானவர் என்றும், அவர் இதுவரை தின்ற மயிர்க் கற்றைகள் ஒன்றாகத் திரண்டு வயிற்றில் சிக்கிக்கொண்டதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்தனர்.
இதையடுத்து குறித்த பெண்ணை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தி, அவரது வயிற்றில் இருந்து மயிர்ப் பந்துகள் சிலவற்றை அகற்றியுள்ளனர்.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், முடியுடன் சேர்த்து, தலையில் மாட்டும் ‘க்ளிப்’ ஒன்றையும் இவர் உட்கொண்டிருந்ததுதான்!