வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம் : கொலையாளிகளின் வழக்கறிஞரின் புதிய தகவல்!!

346

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

படுகொலை வழக்கின் குற்றவாளிகளால் உயர் நீதிமன்றில் முன்வைக்கப்படும் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவு பெற குறைந்தது 5 ஆண்டுகள் வரை செல்லலாம் என குற்றவாளிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்தார்.

ஐந்து குற்றவாளிகள் சார்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

வித்தியா படுகொலை வழக்கின் மூலப் பிரதிகள் (ஊர்காவற்றுறை நீதிவான் மன்ற வழக்குப் பதிவேடு மற்றும் தீர்ப்பாயத்தின் பதிவேடு) சிங்கள மொழிக்கு மாற்றப்பட வேண்டும். அவை சுமார் 4 ஆயிரம் பக்கங்களைக் கொண்டவை. அதற்காக குறைந்தது ஓராண்டு செல்லும். பிரதம நீதியரசர் 5 நீதியரசர்கள் அடங்கிய தீர்ப்பாய குழாமை நியமிக்க வேண்டும்.

அந்தக் குழாம் வழக்கை முழுமையாகப் படிக்க வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொரு விடயத்திலும் உள்ள தவறுகளை நாம் சுட்டிக்காட்ட முடியும்.

இவ்வாறான நிலையில் வித்தியா கொலை தொடர்பான இறுதி தீர்ப்பு ஐந்து வருடங்களின் பின்னரே கிடைக்கும் என சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன மேலும் தெரிவித்தார்.

மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய 7 குற்றவாளிகளுக்கு, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினால் ஒருமித்த மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.