வவுனியாவில் சேதமாக்கப்பட்ட வேளாங்கண்ணி சிலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டது!!

848


 
வவுனியாவில் விசமிகளால் தீ வைத்து சேதமாக்கப்பட்ட வேளாங்கண்ணி சிலை இன்று (09.11) புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் அமைந்திருந்த வேளாங்கண்ணி சிலையானது ஒக்டோபர் 23ம் திகதி இரவு விசமிகள் சிலரால் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்ட நிலையில் அச்சிலையானது உக்குளாங்குளம் கிராம மக்களின் பங்களிப்புடன் சமய வேறுபாடுகள் இன்றி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்று சிவில் பாதுகாப்புக் குழு மத்திய குழு ஆலோசகரும், சமூக சேவையாளருமான தியாகராஜா மகேந்திரராஜா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.



புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வேளாங்கண்ணி சிலையானது அருட்பணி அடிகளார் லக்ஸ்ரன் டி சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டு விசேட திருப்பலி பூஜை வழிபாடும் நடாத்தப்பட்டது.

சேதமாக்கப்பட்ட வேளாங்கண்ணி சிலையை புனர்நிர்மாணம் செய்வதற்கு முன்நின்று உழைத்தவர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்தனர்.



நிகழ்வில் உக்குளாங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.பரமேஸ்வரன், சிவன் ஆலயத் தலைவர் கெ.கீர்த்திசிங்கம், பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ரி.துரைசிங்கம், பண்டாரிக்குளம் குளக்கட்டு சித்திவிநாயகர் ஆலயத்தலைவர் எஸ்.சண்முகராஜா, உக்குளாங்குளம் ஆலய பிரதம குரு சிவசிறி தியாகராஜன் சர்மா சந்திரன் குருக்கள், பண்டாரிக்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டி.இ.எ.விஜியகோன் மற்றும் கிராம மக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.