15,000 விஞ்ஞானிகளால் மனித குலத்திற்கு எச்சரிக்கைக் கடிதம்!!

322

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும்புகை காரணமாக பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன. அதற்கு சுற்றுப்புற சூழல் மாசுபாடே காரணம் என கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் பயன்பாட்டால் வளிமண்டலத்தின் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு அதனால் சூரியனின் வெப்பம் பூமியை தாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காற்று மண்டலத்தில் ஏற்கனவே குறைவாக இருந்த மாசின் அளவு தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

இதற்கு பூமியில் அதிகரித்து வரும் மக்கட்தொகை பெருக்கமும் அவர்களால் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும் புகையும் காரணமாகக் கூறப்படுகிறது.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் பூமிக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் ஆபத்து ஏற்படும். இதை 184 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரம் விஞ்ஞானிகள் கடிதம் மூலம் எச்சரிக்கையாக விடுத்துள்ளனர்.

இதனை ‘மனித குலத்திற்கான எச்சரிக்கை’ என்ற தலைப்பில் ‘பயோ சயின்ஸ்’ அறிவியல் நாளிதழில் வெளியிட்டுள்ளனர். இந்த எச்சரிக்கை மனித குலத்திற்கு விடுக்கப்பட்ட 2 ஆவது எச்சரிக்கை என வர்ணிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசு காரணமாக வனப்பகுதிகள் அழியும். சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும். கடல்வாழ் உயிரினங்கள் அழியும். கடல்நீர் மட்டம் உயர்ந்து பேரழிவு ஏற்படும். மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த 1992 ஆம் ஆண்டு அதாவது 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக இது போன்ற எச்சரிக்கை விடப்பட்டது. அப்போது 1700 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.