வவுனியாவில் இளஞ்செழியனின் தம்பி எனத் தெரிவித்தவர் மீது தாக்குதல்!!

414

 
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (15.11.2017) மாலை 4.30 மணியளவில் இளஞ்செழியனின் தம்பி எனத் தெரிவித்த நபர் மீது முச்சக்கரவண்டி சாரதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் மதுபோதையில் நபரொருவர் சென்று தான் இளஞ்செழியனின் தம்பி என தெரிவித்து சற்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் குறித்த நபர் இ.போ.ச பேரூந்தில் ஏற முற்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் நுழைந்து குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அதனை தடுக்க முற்பட்ட இ.போ.ச ஊழியர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி விரைந்திருந்த போதும் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் எவ்வித முச்சக்கரவண்டிகளும் தரித்து நிற்காமல் சென்றுள்ளன.

அங்கிருந்த நபர்களினால் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி காணொளிகள் மூலம் தாக்குதல் மேற்கொண்ட நபர்களை கைது செய்வதற்குறிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரும், இ.போ.ச ஊழியர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.