வவுனியாவில் முன்னாள் போராளிகளுக்கு வீட்டுத்திட்டம் : பிரதேச செயலாளர் கா.உதயராசா!!

307

வவுனியாவில் அடுத்தவருடம் முன்னாள் போராளிகள், இந்தியாவிலிருந்து திரும்பி அழைக்கப்பட்வர்களுக்கு 100 வீட்டுத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நேற்று (16.11.2017) வவுனியா கள்ளிக்குளம், சிதம்பரபுரம் கிராமத்தில் இடம்பெற்ற கிராம சக்தி ஆரம்ப நிகழ்வில் பிருதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கிராம சக்தி வேலைத்திட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் இவ் வேலைத்திட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதியின் சிந்தனையில் இந்த நாட்டிலிருந்து வறுமையை முற்றுமுழுதாக ஒழிக்கவேண்டும் எனத் தெரிவித்து அதற்கு ஒரு திட்டத்தினை வகுத்து இது ஒரு நீண்டகாலத்திட்டத்திற்கு அமைவாக 2030ஆம் ஆண்டளவிலே இது முடிவுறும். அதன் ஆரம்ப நிகழ்வே இன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது.

துரதிஸ்டவசமாக இந்த 30 வருட யுத்தத்தில் ஒரு தேங்கிய நிலை வந்துவிட்டது. இல்லாவிட்டால் இலங்கை சிங்கப்பூர் போல வந்திருக்கும். அதேநேரம் சிங்கப்பூரில் அரச கரும மொழியாக தமிழ் காணப்படுகின்றது. சிங்கப்பூரை வளர்த்துவிட்டதே தமிழர்கள் தான். தற்போது ஜனாதிபதியாக கூட தமிழர் ஒருவரே இருக்கின்றார். அங்கு இருப்பவர்களைக் கேட்டாலே சொல்வார்கள் சிங்கப்பூரை வளர்த்துவிட்டது தமிழர்களே என்று அதேபோல சுவிஸ், லண்டன் எங்கு சென்று பார்த்தாலும் இன்று தமிழர்களே கோடீஸ்வரர்கள். இங்கு வாழுகின்ற நாங்கள் மட்டும் கஸ்ரப்படுகின்றோம்.

இதைவிடக் கேவலமான விடயம் இந்தியாவில் போய் இருக்கின்றார்கள். இந்தியாவில் போய் இருப்பவர்களுக்கு எவ்வித முன்னேற்றமும் இல்லை ஆகக்குறைந்தது 300 பட்டதாரிகளை உருவாக்கி இருக்கின்றார்களே தவிர இங்கிருந்து எவ்வாறு சென்றார்களே அவ்வாறே அங்கும் இருக்கின்றார்கள்.

இங்கு வாருங்கள் என்று கூப்பிட்டால் கூட வருகின்றார்கள் இல்லை. ஆகவே எங்களுடைய மனப்பாங்கில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். நாங்கள் இந்த நாட்டு மக்களுடன் இணைந்து அபிவிருத்தியில் பங்கெடுத்து இந்த அரசாங்கத்திற்கு எங்களுடைய பங்களிப்பினை வழங்கி வறுமை நிலையிலிருந்து எங்களை முன்னுக்கு வரவேண்டும் அதற்கான திட்டமே இது. இந்தக்கிராமத்தினை அபிவிருத்தி அடைந்த கிராமமான மாற்றவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.

அடுத்த வருடமளவில் 100 வீட்டுத்திட்டம் அமைத்து முன்னாள் போராளிகளுக்கு அல்லது இந்தியாவிலிருந்து திரும்பியவர்களுக்கு திட்டம் ஒன்று போடப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபரிடம் கேட்டுள்ளோம், இப்பகுதியில் அவர்களையும் குடியேற்றவுள்ளோம். ஒரு ஏக்கர் காணி உள்ளவர்களின் 50 பயனாளிகளை தருமாறும் அவர்களுக்கு முருங்கை செயற்றிட்டத்தில் உள்வாங்கி முருங்கை விதை தருவார்கள். அதை வைத்து வளர்த்து அவர்களிடம் திருப்பி 25 ரூபாவிற்கு கொள்முதல் செய்வார்கள். இச் செயற்றிட்டத்தில் முயற்சியானவர்கள் கிராம அலுவலரிடம் பெயர் விபரங்களை வழங்குமாறும் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.