வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

630

 
உலக இந்துக்களால் இன்று (03.12.2016) கார்த்திகைத்தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும், விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.

கார்த்திகை விளக்கீட்டின் தத்துவம்

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.