தேர்தல்கள் ஆணைக்குழுவின் முயற்சியால் 15 ஆண்டுகளாகத் தம் வசம் வைத்திருந்த வவுனியா மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான கட்டடங்களை 3 அரசியல் கட்சிகள் மீளக் கையளித்துள்ளன.
வவுனியா மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான ஊழியர் விடுதிக் கட்டடங்கள் மூன்று கடந்த 15 ஆண்டுகளாக 3 அரசியல் கட்சிகள் வசம் இருந்தன. அவற்றுக்கான கொடுப்பனவுகள் எதனையும் அவை வழங்கவில்லை. அந்தக் கட்டடங்களை மீள ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவை மீளளிக்கப்படவில்லை.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபின்னர் இந்த விடயம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அரசியல் கட்சிகள் வசமுள்ள அரச கட்டடங்களை மீள ஒப்படைக்க வேண்டும் என்று ஆணைக்குழு அறிவுறுத்தியது.
இந்த விடயத்தில் தொடர் அழுத்தங்களைக் கொடுத்தது.
ஈ.பி.டி.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் தம்வசமிருந்த அரச கட்டடங்களை மீள ஒப்படைத்தன.