வவுனியா நகரசபை அபிவிருத்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம்!!

291

 
வவுனியா நகரசபையில் ஆட்சி அமைத்த பின் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

வவுனியா, குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களால் குறித்த கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் நகரசபை வேட்பாளர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா நகரசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் இடத்தில் எதிர்வரும் நான்கு வருடங்களில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகள் குறித்து இந்தக் கொள்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுகாதாரம் துறையில் திண்ம திரவ கழிவு முகாமைத்துவம், நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் உற்பத்தியாகும் திண்ம திரவ கழிவுகளை அகற்றலும் முகாமைத்துவம் செய்தலும், உணவு பாதுகாப்பு தொடர்பில் உணவு உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தல்,

மருத்துவ சிகிச்சை நிலையங்களை பராமரித்தல், நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் சுதேசமருத்துவ சேவை வழங்குதல், மூலிகைத்தோட்டங்களை பராமரித்தல் மற்றும் மருத்துவம்சார் சுற்றுலாவை மேம்படுத்துதல், தாய்சேய் பராமரிப்பு நலப்பணிகளை முன்னெடுத்தல், நோய்கள் பரவாதிருக்க உரிய நடவடிக்கைகளை சுகாதார திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளல்,

பொது இடங்களிலுள்ள பாவனையிலுள்ள மலசலகூடங்களை நவீனமயப்படுத்துவதுடன் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பொது மலசலகூடங்களை அமைத்தலும் சுகாதார முறைப்படி பராமரித்தலும், நவீன வசதிகளுடன்கூடிய பொது குளியலறைகளை அமைத்தலும் சுகாதார முறைப்படி பராமரித்தலும், இளைஞர்களுக்கான உடல்வலுவூட்டல் மையங்களை உருவாக்குதல் என்பனவும், விளையாட்டு தொடர்பில் நவீனவசதிகளுடனான, தேசிய தரத்திலான விளையாட்டு மைதானத்தை உருவாக்குதலும் பராமரித்தலும், விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மையமொன்றை உருவாக்குதல், நவீனவசதிகளுடனான உள்ளக விளையாட்டு மைதான வசதிகளை உருவாக்குதல்,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் இயற்கை வளம் பேணல், வீதியோரங்களில் நிழல் மரங்களை நடுதலும் பராமரித்தலும், பொலித்தீன் மற்றும் உக்காத கழிவுகளை முகாமைத்துவம் செய்தல், நகரின் முக்கிய இடங்களில் வாகன ஒலிப்பான் பாவனையை தடை செய்தல்,

வீதி அபிவிருத்தி தொடர்பில் வீதி புனரமைப்பும் பராமரிப்பும், புதிய வீதிகள் அமைத்தல், பிரதான சந்திகளில் சுற்று வட்டங்கள் அமைத்தல், வடிகால்கள் அமைத்தல், வீதி விளக்குகள் பொருத்தல், வீதிகளுக்கான பெயர்ப்பலகை நாட்டுதல், சுற்றுவட்டங்களில் மின் ஒளிச்சமிஞ்சை பொருத்தல், பாடசாலை, வைத்தியசாலை மற்றும் முக்கிய இடங்களில் வீதி ஒழுங்கு சமிஞ்சைகளை பொருத்தலும் வேக கட்டுப்பாட்டு நடைமுறைகளை நடைமுறைப்படுத்தலும், பாடசாலை வீதிகள், உள்ளக வீதிகளில் பாரவூர்திகளை கட்டுப்படுத்தல், நகர வாகன தரிப்பிடம் அமைத்தல்,

முன்பள்ளி தொடர்பில் கற்றல் உபகரணங்களுடனான முன்பள்ளி அபிவிருத்தி செய்தலும், சந்தை தொடர்பில் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தலும் நவீனமயப்படுத்தலும், புதிய சந்தை தொகுதிகளை அமைத்தல், நடைபாதை வியாபாரத்தை ஒழுங்குபடுத்தலும் அவர்களுக்கான வியாபார இடத்தை ஒழுங்குபடுத்தலும், அத்துமீறி அபகரிக்கப்பட்ட நகர சபைக்கு சொந்தமான காணிகள், வீதிகள் தொடர்பில் கவனம் செலுத்தலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,

பொழுதுபோக்கு தொடர்பில் இயற்கையான பொழுதுபோக்கு மையங்களை உருவாக்குதல், பொதுப்பூங்காவை அபிவிருத்தி செய்தல், சிறுவர் பூங்காக்களை அபிவிருத்தி செய்தல், முதியோர்களுக்கான ஓய்வு நிலையங்கள் அமைத்தல் என்பனவும் நூலகம் தொடர்பில் சனசமூக நிலையங்களில் நூலகங்களை ஆரம்பித்தல், பொது நூலகத்தை நவீனமயப்படுத்தல், இலத்திரனியல் நூலக வசதிகளை உருவாக்குதல், பார்வை புலனற்றவர்களுக்கான வாசிப்பு பிரிவை ஏற்படுத்துதல்,

கலாசார அபிவிருத்தி தொடர்பில் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்ககூடிய கட்டிடக்கலையை அறிமுகப்படுத்தல், வீதிகளுக்கும் சதுக்கங்களுக்கும் மொழி, கலை, கலாசாரத்துடன் தொடர்புடைய நாமங்களை இடல், மாதாந்த முழுநிலா நிகழ்வுகள், சமய விழாக்கள், சமயப்பெரியார்களின் நினைவு தினங்கள் கொண்டாடுதல், மத ஸ்தாபனங்களில் அறநெறிப்பாடசலைகளை அமைத்தல் என்பனவும்,

வியாபார ஸ்தாபனங்களுக்கான பெயர்ப்பலகை தொடர்பில் அரசகரும மொழி நடைமுறை, தமிழ் பெயர்களை பயன்படுத்துவோருக்கு வரிச்சலுகை என்பனவும் இடுகாடு, சுடுகாடு பராமரிப்பு தொடர்பில் பாதுகாப்பு வேலிகள், சுற்று மதில் அமைத்தல், அந்திம கிரிகை மண்டபங்கள் அமைத்தல், பெயர்ப்பலகை பொருத்ததல் என்பனவும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து நகர சபையின் எல்லைக்குட்பட்ட அனர்த்த முகாமைத்துவ செயலணி அமைத்தல், அவசர நிலைக்கான அம்புலன்ஸ் வண்டி வசதி, தீயணைப்பு படைப்பிரிவை நவீனமயப்படுத்தலும் பயிற்றப்பட்ட ஆளணியை அதிகரித்தல்,

அடுக்குமாடி குடியிருப்பு அமைத்தல், இடநெருக்கடியை கருத்தில்கொண்டு நகருக்கு அருகில் அரச, தனியார் உத்தியோகத்தர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து வாடகைக்கு விடுதல், பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டிட நிர்மாணங்களில் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான அணுகும் வசதியை உறுதிப்படுத்தல் என்பன தொடர்பிலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.