வீதித்தடுப்பில் மோதி வானில் பறந்து மாடிக் கட்டிடத்தில் பாய்ந்து சொருகி நின்ற கார்!!

385

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதித் தடுப்பில் மோதி வானில் பறந்து அருகிலிருந்த கட்டிடத்தின் மாடியில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதியின் வீதியில் அதிகாலை வேளையில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த வௌ்ளை நிற சொகுசுக் கார், கட்டுப்பாட்டை இழந்து வீதியின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் சுமார் 20 அடி உயரத்திற்கு வானில் பறந்து எகிறிய கார், அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மாடி ஜன்னலுக்குள் பாய்ந்து, சொருகி நின்றது.

பல் மருத்துவர் ஒருவருக்கு சொந்தமான கிளினிக்கில் நோயாளிகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்திருக்கும் அறைக்குள் முன்பகுதி புகுந்த நிலையில் பின்பக்கத்தின் பெரும்பகுதி அந்தரத்தில் தொங்கியபடி ஒரு கார் நிற்கும் காட்சியைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து சென்ற பொலிஸார் கிரேன் உதவியுடன் காரை அப்புறப்படுத்தியுள்ளனர். ஓட்டிச்சென்றவர் பற்றிய விபரங்கள் எவையும் வௌியிடப்படவில்லை.