13 பிள்ளைகளை வீட்டில் அடைத்து, சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய பெற்றோர் கைது!!

482

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெர்ரீஸ் நகரில் வசித்து வருபவர்கள் டேவிட் ஆலென் டர்பின் (வயது 57) மற்றும் லூயிஸ் அன்னா டர்பின் (வயது 49). இவர்களுக்கு 13 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் இவர்கள் வெளியுலகு தெரியாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அங்கிருந்து தப்பிய அவர்களது 17 வயது மகள் கையில் கிடைத்த செல்போன் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவர்களின் வீட்டிற்குச் சென்ற பொலிசார், 2 வயது முதல் 29 வயது வரை இருந்த 13 பேரை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

அங்கே 12 பேர் இருப்பார்கள் என தாம் தேடிச்சென்றதாகவும் 13 பேர் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

”அவர்களில் பலர் படுக்கையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருளில் இருந்தனர். அவர்களை சுற்றி துர்நாற்றம் வீசியது. பலருக்கு சரியான உணவு தரப்படவில்லை. அழுக்கடைந்த நிலையில் இருந்த அவர்களை ஏன் இப்படி வைத்திருந்தனர் என்பது பற்றி உடனடியாக அவர்களது பெற்றோரால் சரியான பதில் தர முடியவில்லை. பசியாக இருக்கிறது என கூறியதனை அடுத்து 13 பேருக்கும் உணவு மற்றும் ஜூஸ் வழங்கப்பட்டது,” என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து, கொடுமைப்படுத்தியது மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தியது ஆகிய குற்றங்களின் கீழ் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிணை பெற 90 இலட்சம் அமெரிக்க டொலர் தொகையைச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. அவர்கள் மீது வங்கிக்கொள்ளை முயற்சி வழக்கு ஒன்றும் முன்பே பதிவாகியுள்ளது.