டெல்லியில் இரத்த காயத்துடன் இறந்து கிடந்த தமிழக மாணவர் : கொலை செய்யப்பட்டாரா?

269


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் உள்ள கழிவறையில் தமிழக மாணவர் சடலமாக கிடந்த நிலையில் அவர் தலையில் ரத்த காயம் உள்ளதால் கொலை செய்யப்பட்டாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.



தமிழ்நாட்டின் திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துமனை கல்லூரியில் எம்.எஸ் படித்து வந்தார். மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கியிருந்த சரத்பிரபு அங்குள்ள கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

சரத்பிரபுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட கழிவறையில் ஊசி கண்டெடுக்கப்பட்டதாகவும், பொட்டாசியம் குளோரைட் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.



இது தற்கொலையாக இருக்கும் என பொலிசார் முதலில் சந்தேகப்பட்ட நிலையில் சரத்பிரபுவின் தலையில் ரத்தகாயம் உள்ளதை கண்டுப்பிடித்துள்ளனர். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கமாட்டார் என்றும் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பொலிசார்ர் சந்தேகிக்கின்றனர்.



சரத்பிரபுவுடன் அரவிந்த், கார்த்திகேயன் உட்பட தமிழகத்தை சேர்ந்த 4 பேர் தங்கியிருந்தனர். இதில் கார்த்திகேயன், அரவிந்த் ஆகியோரை தனி அறையில் வைத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் கார்த்திகேயன் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே உண்மை தெரிய வரும் என கருதப்படுகிறது.

சரத்பிரபு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் கூறும் நிலையில் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத தனது மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என சரத்பிரபுவின் தந்தை செல்வமணி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.