குளிர்பானம் எனக் கருதி எண்ணெய் மருந்து வகையொன்றை பருகிய இரண்டரை வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நொச்சியாகம, அபகஹாவெவ என்னும் பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டரை வயதான சொனக்ஸா வன்னிநாயக்க என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சோடா போத்தல் ஒன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வகை எண்ணெய் மருந்தை குளிர்பானம் என கருதி இந்த சிறுவன் பருகியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவன் இந்த பானத்தை பருகியதாகவும் வயிறு வலிக்கின்றது எனவும் தாயிடம் கூறியுள்ளான்.
பின்னர் தாயும் தந்தையும் நொச்சியாகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆறு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த போதிலும் சிகிச்சைகள் பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.
வாத நோய்க்கு பயன்படுத்தும் பழைய எண்ணெய் மருந்து ஒன்றையே சிறுவன் பருகியுள்ளான் என தெரிவிக்கப்படுகின்றது.
விசம் உடலில் கலந்தமையே இந்த மரணத்திற்கான காரணம் என சட்ட வைத்திய அதிகாரி எம்.கே.சேனாநாயக்க அறிவித்துள்ளார்.