அல்ப்ஸ் மலையில் கிரிக்கெட் விளையாட உள்ள இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர்கள்!!

335

 
சுவிஸ்லாந்தின் அல்ப்ஸ் மலையில் அடுத்த மாதம் உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இதற்கான டைமண்ட்ஸ் அணியில் இலங்கையின் முன்னாள் நட்சத்திரங்களான டில்ஷான் ஜெயவர்த்தன, மலிங்க ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அல்ப்ஸ் பனிமலைத் தொடரில் அமைந்துள்ள அழகான பகுதி செண்ட் மோரிட்ஸ் ரிசர்ட், இது கடல் மட்டத்தில் இருந்து 5910 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இங்கு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு, போட்டிகள் நடத்தும் வித்தியாசமான முயற்சிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையும் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, டைமண்ட்ஸ் மற்றும் ரோயல்ஸ் என்ற உலகின் முன்னணி வீரர்கள் உள்ள இரு அணிகளும் மோத உள்ளன.

டைமண்ட்ஸ் அணியில் சேவாக், சகீர் கான், அஜித் அகர்கர், ஜெயவர்தன, டில்ஷான், மலிங்க, மைக்கல் ஹசி முதலிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ரோயல்ஸ் அணியில் ஸ்மித், சோயிப் அக்தர், பிராவோ, அப்துல் ரசாக், மேட் பிரையர், நாதன் மெக்கல்லம், டேனியல் விட்டோரி முதலிய வீரர்கள் உள்ளனர்.

உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் முதன் முறையாக பனிமலை கிரிக்கெட்டில் விளையாட உள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.