வேலைக்காரருக்கு 600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கொடுத்த முதலாளி!!

310

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், தனது வேலைக்காரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கஜ்ராஜ் சிங் ஜடேஜா, திருமணமாகாத இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்.

இதனையடுத்து அவரிடம் 40 ஆண்டுகளாக வேலை பார்த்த வினு பாய், தனது குடும்பத்தினருடன் பங்களாவை விட்டு வெளியேறினார்.

அடுத்து என்ன செய்வது என குழப்பத்தில் இருந்த வினு பாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது, சில நாட்களுக்கு முன் கஜ்ராஜ் சிங் ஜடேஜாவின் உறவினர்கள் 8 பேர் காரில் வந்து, வீட்டில் இருந்த வினு பாயை கடத்திச் சென்றுள்ளனர்.

வினுபாய்க்கு, சுமார் 600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கஜ்ராஜ் சிங் ஜடேஜா உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அதனை தங்கள் பெயருக்கு எழுதித் தருமாறும் கூறி சரமாரியாக அடித்துள்ளது.

இதற்கிடையே வினுபாயின் மகன் பொலிசில் புகார் அளிக்க, விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அவரை மீட்டனர்.

இவ்வளவு பெரிய சொத்தை தனக்கு கஜ்ராஜ் எழுதிய வைத்ததை அறிந்து, வினு பாய் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்.

தனது எஜமானர் குறித்து கூறுகையில், ‘அவரிடம் நான் வேலைக்கு சேர்ந்த பிறகு, எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார், என் பிள்ளைகளை தனது பிள்ளைகளாகவே கருதிய அவர், உயர் கல்விக்காக பிரித்தானியாவுக்கு அனுப்பி படிக்க வைத்தார்.

அந்த நன்றிக்கடனை எப்போது அடைப்பது என்பது தெரியாமல் இருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக அவர் எங்களை விட்டு பிரிந்து விட்டார். 600 கோடி சொத்துக்களை எங்களுக்கு எழுதி வைத்து விட்டு, ஏழேழு தலைமுறையினரும் எப்போதுமே தீர்க்க முடியாத நன்றிக் கடனை எங்களுக்கு அவர் விட்டுச் சென்றுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.