வவுனியா முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம் அவர்களால் தீபாவளியை முன்னிட்டு அன்பகத்தில் புத்தாடைகள் அன்பளிப்பு!!(படங்கள்)

445


வவுனியா முன்னாள் உப நகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களினால் தீப திருநாளை முன்னிட்டு கோவில்குளம் அன்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற முதியோர், முன்னாள் போராளிகள் மற்றும் போரில் விழுப்புண்ணுற்றவர்களும் என 150 பேருக்கு புத்தாடைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன..

கோவில்குளம் சிவன்கோவில் அன்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற, போரினால் பாதிக்கபட்டு உடைமைகள், உறவுகள் அனைத்தையும் இழந்த முதியோர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் போரில் விழுப்புண்ணுற்றவர்களும் என 150ற்கும் மேற்பட்ட எமது உறவுகளுக்கு தீப திருநாளை முன்னிட்டு கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையினால் அன்பளிப்பு செய்யபட்ட ஆடைகளை வவுனியா கோவில்குள இளைஞர் கழக ஸ்தாபகரும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், முன்னாள் உப நகரபிதாவுமான திரு.க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களினால் இன்று கையளிக்கபட்டது.



மேற்படி நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் கோவில்குளம் இளைஞர் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பபட்டிருந்தது. இதில் அதிதியாக கலந்து கொண்ட கழகத்தின் ஸ்தாபகரிடம் அங்குள்ள நமது உறவுகள் தங்கள் வாழ்க்கை நிலை பற்றி கருத்து தெரிவிக்கையில்..

தாங்கள் மிகவும் மனவேதனைகளுடன் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், போராளிகளான தங்கள் பிள்ளைகளை விடுதலைப் போராட்டத்தில் இழந்ததால் தான் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டதாக பெற்றோர்கள் சிலர் கவலை தெரிவித்தனர்.



போராட்டத்தில் கால், கைகளை இழந்த போராளிகள் கருத்து தெரிவிக்கையில்.. விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட காரணத்தினால் சமூகத்தினராலும் உறவுகளாலும் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் தங்களை வந்து பார்த்து உதவி செய்ய யாருமே முன் வருவதில்லை என்றும், சிவன் கோவில் நிர்வாக சபையினர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மனிதாவிமான அடிப்படையில் தான் தங்களை கவனித்து வருவதாகவும் கூறினர்.



அத்துடன் நாட்டின் விடுதலைக்காக போராடியதால் தான் தாங்கள் இன்று இந்த ஆசிரமத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டது என்றும் கண்ணீர் மல்க கூறி தயவு செய்து தமக்கு உதவுமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளனர்.


கழகத்தின் ஸ்தாபகர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கையில்.. எதோ ஒரு வகையில் இவர்களின் இந்த நிலைக்கு தமிழர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் பதில் சொல்ல வேண்டிய இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தான் இருகின்றோம். ஆசிரமங்களில் வாழும் எமது மக்கள் இன்று பொருளாதார நெருக்கடியில் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

வறுமையில் வாடுவோரின் அளவு இன்னும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதில் நாங்கள் வேதனைப்படும் விடயம் என்னவெனில் மேற்படி பாதிக்கப்பட்டோரை அவர்களின் உறவுகள் கூட நேரில் வந்து பார்ப்பது கிடையாது என்பது தான். வெளி நாடுகளில் வாழும் அவர்களின் உறவுகள், நண்பர்கள் கூட தங்களை கைவிட்டு விட்டதாக கூறுகின்றனர்.


உதவி செய்ய முடியாமல் இருந்தாலும் இவர்கள் இருக்கும் இந்த நிலைமையில் அவர்களுடன் தொடர்பை வைத்திருந்தாலே அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் என்று கூறினார். அத்துடன் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்ற நல்ல உள்ளங்கள் தயவு செய்து உதவ முன்வர வேண்டும்.

நம் இனத்தின் விடுதலைக்காக போராடிய போராளிகளின் உணர்வுகளை நாம் நிச்சயமாக மதிக்க வேண்டும். அமைப்பு வேறாக இருந்தாலும் நானும் ஒரு போராளி என்கின்ற அடிப்படையில் அவர்களின் வேதனையினை என்னால் இலகுவாக உணர முடிகின்றது.

எந்த அமைப்பு என்பது முக்கியமில்லை எல்லா போராளிகளும் போற்றப்பட வேண்டியவர்கள் தான். உறவுகள் மற்றும் சமூகம் போராளிகளை ஒதுக்குவது மிகவும் வேதனையான விடயமாக இருகின்றது. இன்றைய சூழலில் முதியோர்கள், போராளிகள்,சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான நம் உறவுகள் அநாதை ஆசிரமங்களில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றனர்.

நூறில் ஒன்று தான் இந்த கோவில்குள அன்பக மக்கள். இன்னும் எத்தனையோ அன்பகங்கள் வடமாகாணம் முழுவதும் இருகின்றது. இந்த நிலை மாற வேண்டும் இதன் மாற்றத்தை நாங்கள் தான் உருவாக்க வேண்டும்.


தீப திருநாளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அணைத்து தமிழ் உறவுகளிடமும் நான் பணிவாக கேட்டுக்கொள்ளும் ஒரு விடயம், தயவு செய்து உங்களால் முடிந்த உதவியை, அது சிறிய உதவியாக இருந்தாலும் பரவாயில்லை செய்யுங்கள் என்று வேண்டி நிற்கிறேன்.

இந்த ஆசிரமத்தில் வசிக்கும் போராளிகளின் பெற்றோர் 10 பேருக்கு உடல் நிலை சற்று மோசமாக இருக்கின்ற காரணத்தினால் வைத்தியர்கள் அவர்களுக்கு தண்ணீர் ஊற்றி பயன்படுத்தப்படும் மெத்தை “water bed” பாவிக்கும் படி கூறியுள்ளனர். இதற்குரிய உதவியினை ஆசிரம நிருவாக சபையினர் கேட்டுள்ளனர். உதவ விரும்பும் உள்ளங்கள் நேரடியாகவோ அல்லது எங்கள் கழகத்தினூடாகவோ உங்கள் உதவிகளை செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு..
திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்)
கோவில்குள இளைஞர் கழகம்,
இல 58, 5ம் ஒழுங்கை,
கோவில்குளம், வவுனியா.
0094 779942797
0094 242222527.

1 2 3 4 5 6 7 8 9 10