மலேசிய விமானத்தை தேடும் முயற்சியின் உச்சக்கட்டம் : ஒரு சில நாட்களில் உண்மை தெரியவரும்!!

299

Flight

239 பேருடன் பீஜிங் சென்றபோது நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சில நாளில் முடிவு தெரிந்துவிடும் என நம்பப்படுகிறது.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 370 பீஜிங் சென்றபோது நடுவானில் கடந்த 8ம் திகதி அதிகாலை 2.40 மணிக்கு மாயமானது.

விமான போக்குவரத்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அதிக பணச்செலவில் அந்த விமானத்தை தேடும் வேட்டை நடந்து வருகிறது.

அந்த விமானத்துக்கு என்ன ஆனது என்பது குறித்து திட்டவட்டமான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் குடும்பங்கள் இன்று வரை கண்ணீரில் தவித்து வருகின்றன.

அந்த விமானம், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்து என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்து வைத்துள்ள கறுப்பு பெட்டியை தேடும் வேட்டை நடந்து வருகிறது.

கறுப்பு பெட்டியில் இருந்து வருகிற ஒலியைக்கேட்டு, அது இருக்கும் இடத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும் டோவ்டு பிங்கர் லொக்கேட்டர் என்னும் கருவிகளை ஓஸன் ஷீல்டு என்னும் அவுஸ்திரேலிய போர்க்கப்பலும், எச்.எம்.எஸ். எக்கோ என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் இழுத்துச்சென்று தேடுகின்றன.

மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியானது என கருதப்படுகிற பிங் சமிக்ஞைகள் கடந்த 5ம் திகதி 2 முறை கிடைத்தது. தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையும் இரு முறை கிடைத்துள்ளது. இந்த 4 சமிக்ஞைகளுமே மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

மாயமான விமானத்தை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய குழுவுக்கு தலைமை தாங்குகிற ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி ஆங்கஸ் ஹூஸ்டன் பெர்த் நகரில் நேற்று கூறுகையில், எனக்கு இப்போது திடமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒன்று, மாயமான மலேசிய விமானத்தை நாங்கள் கண்டுபிடிப்போம் அல்லது அந்த விமானத்துக்கு நேர்ந்தது என்ன என்பதை கண்டறிவோம்.

இதற்கு அதிக காலம் ஆகாது. ஒரு சில நாட்களில் இது தெரிந்துவிடும். மாயமான விமானம், கடலுக்கு அடியில் கடைசியாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் உறுதி செய்ய முடியும் என கூறினார்.

இதேபோன்று அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமை கமிஷனர் மார்டின் தோலன் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இன்னும் நெடிய தூரம் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் விமானத்தை தேடும் வேட்டையில் இதற்கு முன்பு இருந்ததை விட இப்போது சாதகமான அம்சங்கள் உள்ளன என கூறினார்.

இந்த நிலையில், மாயமான விமானத்தை தேடும் பணி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் 75 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் தேடுதல் வேட்டை நடந்தது. நேற்று அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடமேற்கில் 2,280 கி.மீ. பகுதியை மையப்பகுதியாகக் கொண்டு, 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவில் தேடப்படுகிறது.

இந்த குறுகிய பிரதேசத்தில் மாயமான விமானத்தை தேடும் பணியில் 10 இராணுவ விமானங்கள், 4 பயணிகள் விமானங்கள், 13 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. எனவே ஒரு சில தினங்களில் இந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வரும், விமானத்தின் கதி உலகிற்கு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.