மாயமான மலேசிய விமான பாகம் கண்டுபிடிப்பு!!

253

Flight

மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ஆம் திகதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளன.

விமானம் மற்றும் அதன் கறுப்பு பெட்டியை தேடும் பணியில், அமெரிக்காவின் புளூபின் 21 என்ற நீர்மூழ்கி ரோபோவும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

இந்த ரோபோ 14 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்தது. எனினும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே, விமானம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தின் உடைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட்டை தலைமையமாக கொண்டு செயல்படும் கடலாய்வு நிறுவனம், கடந்த மார்ச் 10ஆம் திகதியில் விமானத்தை தனியாக தேடி வந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோ மீட்டர் தொலைவில் மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று நம்பக்கூடிய பொருட்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலாய்வு நிறுவனம் சுமார் 2,000,000 சதுர கிலோ மீட்டர் பகுதியில் தேடியுள்ளது. செயற்கைக்கோள் மற்றும் விமானங்கள் எடுத்த புகைப்படங்களை கொண்டு, விமானம் கடைசியாக பயணித்த இடத்திற்கு வடக்கே 20க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

அணு ஆயுதங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்களை கடலாய்வு நிறுவனம் பயன்படுத்தினோம். விமானம் காணாமல் போனதற்கு முன்னதாக உடைந்த பாகங்கள் எதுவும் இல்லை. இது மாயமான விமானத்தின் உடைந்த பாகம் என்று நாங்கள் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் எந்த கோணத்திலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கடலாய்வு நிறுனவத்தின் செய்தித் தொடர்பாளர் டேவிட் போபி கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசிய விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் அசாருதீன் அப்துல் ரகுமான், நாங்கள் இந்த தகவலை ஆய்வு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.