24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி யாழ்.நோக்கிப் பயணம்!!

291

யாழ்தேவி

யாழ்தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், செப்டம்பர் 15ம் திகதி பரீட்சார்த்தமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்டார்.

செப்டெம்பர் இறுதியில் கொழும்பு- யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பின் பொதுமக்களுக்கு யாழ்ப்பாணம் செல்ல அவகாசம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை மீளமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு யாழ். ரயில் நிலையமும் துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி செப்டம்பர் 15ம் திகதி கொழும்பிலிருந்து யாழ். வரையான பரீட்சார்த்த ரயில் சேவை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னர் யாழ். தேவி ரயில் சேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, யாழ்தேவி இந்த வருட இறுதியில் காங்கேசன்துறை வரை பயணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் இறுதி முதல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை 3 ரயில்கள் தினமும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.