சவுதியில் குழந்தையை சித்ரவதை செய்து கொன்ற தந்தைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதியில் பாலியல் பலாத்காரம், கொலை, சமய இழிவு, ஆயுத கொள்ளை, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனைதான் தீர்ப்பாக அளிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சவுதியின் வடக்கில் உள்ள ஜவ்ப் பகுதியில் வசித்து வந்த மக்புல் பின் மடி அல்-ஷராரி என்பவர், தனது 2 வயது குழந்தையான முஹம்மதுவை சித்ரவதை செய்து கொன்றதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் இவர் தனது குழந்தையை தடி ஒன்றால் தலையின் பின்புறத்திலும், உடல் முழுவதும் அடித்து, முகத்திலும் குத்தியதால் அக்குழந்தை இறந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நேற்று அவரது தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் நிறைவேற்றப்பட்டுள்ள மரண தண்டனையின் எண்ணிக்கை இத்துடன் சேர்த்து 18ஆக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.