வவுனியாவில் கடையைப் பூட்டி விட்டு உள்ளிருந்து தன்னைத் தானே காயப்படுத்திய வர்த்தகர்!!

327


Man

வவுனியாவில் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் தனது வர்த்தக நிலையத்தினை பூட்டி விட்டு உள்ளே இருந்தவாறு தனது உடம்புப் பகுதிகளை காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.08) அன்று மாலை 5 மணியளவில் வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் உள்ளே இருந்த வர்த்தகர் ஒருவர் தன்னை கத்தியால் காயப்படுத்தி கொண்டு இருக்கின்றார் என்ற தகவல் வவுனியா பொலிசாருக்கு கிடைத்தது. அங்கு சென்ற பொலிசார் வெளியே நின்றவாறு கதவை திறக்குமாறு உள்ளே இருக்கின்ற வர்த்தக நிலைய உரிமையாளரிடம் கூறிய போதும் கதவு திறக்கப்படவில்லை.

பின்னர் பொலிஸாரும் அருகிலிருந்த பொதுமக்களும் பல மணிநேரம் எடுத்த முயற்சியால் கதவு உடைக்கப்பட்டது.வர்த்தக நிலையத்திற்குள் சென்ற பொலிஸார் தன்னை காயப்படுத்தி விட்டு படுத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளரை காப்பாற்றி உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.



இச் சம்பவம் பற்றி நேரில் பார்த்தவர் தெரிவிக்கையில், மேற்படி வர்த்தக நிலைய உரிமையாளர் மது போதையில் இருந்தவாறு போத்தலை உடைத்து வெளியில் போட்டும் பின்னர் கத்தி மற்றும் கண்ணாடி துண்டுகளால் தனது உடம்புப் பகுதிகளை காயப்படுத்தி கொண்டிருந்தார்.



இந் நிலைமையில் நாங்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பொலிஸார் வருவதை அவதானித்த மேற்படி வர்த்தகர் வர்த்தக நிலையத்தினை மூடிவிட்டு உள்ளே படுத்துவிட்டார். பின்னர் பொலிஸார் மேற்கொண்ட முயற்சியில் மேற்படி வர்த்தகரை காப்பாற்ற முடிந்தது.


இவ்வாறு செய்தமைக்கான காரணத்தினை பொலிஸார் வர்த்தக உரிமையாளரை விசாரித்தபோது வர்த்தக உரிமையாளர் மது போதையில் இருந்தமையால் சரியான பதிலை கூறவில்லை என்று தெரிவித்தார்.