வவுனியா நயினாமடு மக்களை த.தே.ம.முன்னணியினர் சந்தித்து கலந்துரையாடல்!!

297


Nainamadu

அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு கீழ் இருக்கின்ற நயினாமடு மக்கள் தெரிவித்துள்ளனர்.



நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் நயினாமடு மக்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

போருக்கு பின்னர் பல அரசியல் கட்சிகள் வந்து போகின்றார்கள் அவர்கள் எமக்காக ஒன்றும் செய்யவில்லை. இதனால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.



எமக்கு வருகின்ற உதவிகளும் ,சமூக சேவைகளும் முற்றுமுழுதாக எம்மிடம் வந்து சேருவதில்லை. எல்லாம் பக்கச்சார்பாகவே நடைபெறுகின்றது.



இறந்தவர்களையும் எங்களையும் வைத்து அரசியல் நடத்தும் சில அரசியல் கட்சியினர் தமது தேவைகளுக்கு மாத்திரமே வந்து போகின்றனர். அவர்களது தேவைகள் நிறைவேறிய பின்னர் எம்மிடம் வருவதில்லை.


அத்தோடு எமது பிரதேச செயலகத்தின் ஊடான செயற்பாடுகள் சில பக்கச்சார்பாகவே இடம்பெற்று வருகின்றன.

வெளியிடங்களில் இருந்து வருகின்றவர்களுக்கு காணி, வீட்டுத்திட்டம் போன்றன முன்மாதிரியாக வழங்கப்படுகின்றன. ஆனால் எமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்வருவதில்லை.


பல தடவைகள் பலரிடம் எடுத்துக்கூறியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் எமது அவலங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர் .

இந்தநிகழ்வில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.