சீனாவில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரின் கன்னத்தில் பாய்ந்த கம்பி மூளை வரை ஊடுருவி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பழைய வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டடத்தில் நீட்டிக் கொண்டிருந்த இரும்புக் கம்பி, அவர் காதுக்கு அருகில் கன்னப் பகுதியில் குத்தி, கண் மற்றும் மூளையை ஊடுருவிச் சென்றது.
இதனை பார்த்த சக ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். விரைந்த வந்த அதிகாரிகள், குறித்த நபரின் முகத்தில் குத்தியிருந்த இரும்புக் கம்பியை வெட்டினர்.
வலியால் துடித்த நபரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கம்பியை அகற்றினாலும் அவரது ஒரு கண் மற்றும் காது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.