ரோஜாவின் உயிருக்கு ஆபத்து!!

337

Roja

நடிகை ரோஜாவின் உயிருக்கு ஆபத்து என்று இயக்குனரும், அவரது கணவருமாறு செல்வமணி கவலை தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் நகரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜாத்திரை திருவிழாவில், தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா கலந்து கொண்டார்.

ஆரத்தி கொடுப்பதில் அவருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் யாரோ ஒருவர் ரோஜா கையில் கத்தியால் கிழித்தார். இதில் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. அதோடு அவரது ஆரத்தி பூஜை தட்டும் தள்ளி விடப்பட்டது.

இதைக்கண்டித்து ரோஜா வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த ரகளையில் அம்மன் வீதி உலா நடப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஜாத்திரை திருவிழாவில் மோதல் ஏற்பட ரோஜாவே காரணம். எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரி தெலுங்கு தேசம் கட்சியினர் நகரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அப்போது ரோஜாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது, மேலும் கோவில் விழாவில் ரோஜா அரசியலை புகுத்துகிறார் என்று தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

ரோஜா கொடும்பாவி எரித்த தெலுங்கு தேசம் கட்சியினரை கண்டித்து வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் நேற்று நகரியில் பேரணி நடத்தினார்கள்.

ஆர்.டி.எம். திரையரங்கில் இருந்து புறப்பட்ட பேரணி அம்பேத்கார் சர்க்கிள் வரை நடந்தது. இறுதியில் தெலுங்குதேசம் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணம்ம நாயுடு கொடும்பாவியை எரிக்க முயன்றனர். ஆனால் பொலிசார் அதை தடுத்து விட்டனர்.

இந்நிலையில் ரோஜா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அவரது கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி கவலை தெரிவித்துள்ளார்.

அவர், ‘ஜாத்திரை திருவிழாவில் முதல் ஆரத்தி வழங்கவில்லை என்பதற்காக ரோஜா போராட்டம் நடத்தவில்லை. கடவுளுக்கு முதல் ஆரத்தி, 2வது ஆரத்தி என்று சொல்வது அர்த்தமற்றது. ரோஜா கடவுள் பக்தி உள்ளவர்.

அம்மனுக்காக விரதம் இருந்து உடலை வருத்திக்கு கொள்வார். அப்படிப்பட்டவரின் ஆரத்தி தட்டை தட்டி விட்டதால்தான் ஆவேசம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது கையை கத்தியால் வெட்டியதை கூட அவர் கவலைப்படவில்லை. ஆனால் ஆரத்தி தட்டை தட்டி விட்டதுதான் அவரை கவலையடைய செய்து உள்ளது.

எனது மனைவி தைரியமானவள். இந்த சம்பவத்துக்கு பிறகு அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.