சுஜிபாலாவுடன் திருமணம் நடந்தது உண்மை : இயக்குனர் ரவிக்குமார்!!

423

Sujibala

அய்யா வழி, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஜிபாலா. இவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த பி.ரவிக்குமார் இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் உண்மை என்ற படத்திலும் நாயகியாக நடித்தார்.

படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் சில வாரங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

சுஜிபாலா தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும் அவருக்கு வீடு, நிலங்கள் வாங்கி கொடுத்தேன் என்றும் ரவிக்குமார் குற்றம் சாட்டினார். சுஜிபாலா இதனை மறுத்தார். ரவிக்குமாருடன் தனக்கு திருமணம் நடக்கவில்லை என்றும் சொத்துக்கள் கொடுத்ததாக பொய் சொல்கிறார் என்றும் தன் மீது ஆசிட் வீசுவேன் என்று மிரட்டுகிறார் என்றும் கூறினார். போலீசிலும் ரவிக்குமார் மீது புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு இந்த பிரச்சினை அடங்கியது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று நடந்த உண்மை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் ரவிக்குமாரிடம் உங்களுக்கும் சுஜிபாலாவுக்கும் திருமணம் நடந்தது உண்மையா இல்லையா என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்து ரவிக்குமார் கூறியதாவது..

எனக்கும் சுஜிபாலாவுக்கும் திருமணம் நடந்தது உண்மை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. உண்மை படத்தில் சுஜிபாலாவை நாயகியாக நடிக்க வைத்தேன். முதலில் நடிகையாகத்தான் எனக்கு அறிமுகமானார். பிறகு நெருங்கி பழகி காதலித்தோம். திருமணமும் செய்து கொண்டோம்.

சுஜிபாலாவுக்கு வீடு வாங்கி கொடுத்தேன். தோட்டமும் வாங்கி கொடுத்தேன். அதன் பிறகு மாறிவிட்டார். மனைவியாக இருந்து என்னை ஏமாற்றினார். நான் வாங்கி கொடுத்த வீடு, வாசல் சொத்துக்களையெல்லாம் எடுத்துக் கொண்டார். அடித்து துன்புறுத்துவதாகவும் அசிட் வீசுவேன் என்று மிரட்டுவதாகவும் போலீசில் புகார் அளித்தார். அதெல்லாம் பொய். அவரை நான் மிரட்டவில்லை.

காதல், கல்யாணம் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளது. அடுத்து என் திருமண அனுபவங்களை வைத்து லவ் பண்ணலாமா வேண்டாமா என்ற படத்தை எடுக்க இருக்கிறேன்.

உண்மை படம் ஊழல் பற்றிய கதை. விறுவிறுப்பான ஆக்ஷனும் இருக்கும். இதில் நான் போலீஸ் அதிகாரியாகவும், திருநங்கை மற்றும் மன நலம் பாதித்த இளைஞன் என மூன்று கரக்டரில் நடிக்கிறேன். ராதாரவி, தோட்டா சீனிவாசராவ், ஷகிலா, போன்றோரும் உள்ளனர். அன்பு ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். விரைவில் ரிலீசாக உள்ளது என்று அவர் கூறினார்.