வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தின் தேருக்கு தீ வைத்த சம்பவத்திற்கு செல்வம் எம்.பி.கண்டனம்!!

406

ther

வவுனியா மாவட்டத்தின் இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தின் தேர் இனந்தெரியாதோரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தேர் இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடையம். மக்களுக்கிடையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் இனம் தெரியாத நபர்களினால் குறித்த நாசகாரிய செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆலயத்தினுள் சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தேர் எரிக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கருத முடிகின்றது. எனவே குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வவுனியா பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஆலயங்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் முன்வர வேண்டும் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.