ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று தொடக்கம் கட்டுப்பணம் செலுத்தலாம்!!

119


SL

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் கட்டுப்பணம் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.



இதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.15 வரை கட்டுப்பணத்தை ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் செலுத்தலாம் என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரத்னாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் கட்டுப்பணம் செலுத்துவது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆணையாளர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டும்.



தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் 50,000 ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். அத்துடன் ஏனைய சுயாதீன வேட்பாளர்கள் கட்டுப்பணமாக 75,000 ரூபாவை செலுத்த வேண்டும்.



இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கான சகல ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


2014ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களாக ஒருகோடியே 54 இலட்சத்து 44ஆயிரத்து 490பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன் வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் மாதம் 8ம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.