இறந்த மாணவன் உயிர் பிழைத்து மீண்டும் இறந்த சோகமான சம்பவம்!!

518

Boy

தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்தில் இறந்த மாணவன் உயிர் பிழைத்து மீண்டும் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் மூர்த்தி 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 12ம் திகதி வீட்டில் பெற்றோரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார், அதற்கு அவர்கள் தர மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்த மூர்த்தி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காததால் மூர்த்தியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு மூர்த்தியின் மூச்சு நின்றதால் அவர் இறந்துவிட்டதாக அவரது பெற்றோர்கள் கருதினர்.

இதனைத் தொடர்ந்து, தகவலறிந்ததும் உறவினர்களும் அங்கு திரண்டதையடுத்து, இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
இறுதிசடங்குக்கு முன்பு அவரது தாய் மூர்த்திக்கு, ஆசையான தேநீரை தனது கையால் மூர்த்தியின் வாயில் ஊற்றியுள்ளார்.

அப்போது மூர்த்திக்கு நாடித்துடிப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்த உறவினர்களிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மூர்த்தியை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊட்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.