சீரற்ற காலநிலையால் சுமார் 40,000 பேர் இடம்பெயர்வு!!

329

Rain

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 40,000ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையினை அடுத்து ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள், கோவில்கள், பாடசாலைகள் மற்றும் சமூக அரங்குகளில் தங்கியுள்ளனர்.

குறிப்பாக அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள், சீரற்ற காலநிலை மற்றும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வௌ்ளநீர் வீதிகளிலும் ரயில் பாதைகளிலும் நிறைந்துள்ளதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கலாவெவ, இராஜங்கனய, திஸ்ஸவெவ உள்ளிட்ட சில குளங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.