இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்ட பாடசாலை சிறுவர்கள் : அம்பாறையில் ஓர் கொடூர சம்பவம்!!

850


பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் பாடசாலை செல்லும் இரு சிறுவர்கள் அவர்களைப் பெற்றெடுத்த சொந்தப் பெற்றோரால் துடிக்கத் துடிக்கச் சூடுவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 10 மாதம் பெற்றெடுத்த தாய்மார்களே இவ்விதம் கதறக்கதற சூடுவைத்தவர்களாவர்.

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகலளவில் மனிதஅபிவிருத்திதான உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியால் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யு.எல். அசாருதீன் ஆகியோர் சூடுபட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சகிதம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று அவர்களை சட்ட வைத்திய அறிக்கைக்காக அனுமதித்துள்ளனர்.



இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள ஒரு தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சூடுவைக்கப்பட்டு 04 நாட்களுக்குப் பிறகே அவர்கள் செல்லும் பாடசாலை ஆசிரியரொருவருடாகவே இவ்விடயம் தெரியவந்தது.

இது தொடர்பில் காரைதீவிலுள்ள மனிதஉரிமைகள் மற்றும் சிறுவர் மகளிர் உரிமைகளுக்காக சதா இயங்கிவரும் மனித அபிவிருத்தித் தாபனத்திற்கு தகவல் கிடைக்கப் பெற்றதும் மறுகணம் அதன் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந் ஸ்தலத்திற்கு விரைந்தார்.



புதனன்று காலை அவர் குறிப்பிட்ட பாடசாலைக்கு சென்று பிரஸ்தாப சிறுவர்களைப் பார்வையிட்டார். பின்பு நேற்று வியாழனன்றும் வீடுகளுக்குச் சென்றார். அவர் அங்கு கண்டகாட்சி அவரையே மெய்யுருக வைத்தது.



பாடசாலையில் தரம்1 பயிலும் 07 வயதுடைய சிறுவனது வலது கரத்திலும் தரம் 4 பயிலும் 09 வயதுடைய சிறுமியினது இருகரங்களிலும் சூட்டுக்காயங்களிருந்தன. அச்சூட்டை வைத்தவர்கள் அவர்களது பெற்றோர்களே. அதுவும் அவர்களை 10 மாதம் பெற்றெடுத்த தாய்மார்களே இவ்விதம் கதறக்கதற சூடுவைத்தவர்கள்.


அவர்களை விசாரணை செய்தபோது துடிப்புத்தனம் மற்றும் அவர்களது நடவடிக்கையுமே இவ்வாறு சூடுபோடக் காரணமென அவர்கள் தெரிவித்துள்ளனர். புதனன்று முதன்முதலில் பாடசாலையில் பார்த்ததும் இவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய அவசியமிருந்தது.

எனினும் முறைப்படி அணுகவேண்டும் என்பதற்காக உடனடியாக சிறுவர் துஸ்பிரயோகத்தை முறையிடும் 1929 தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்தினார். பின்னர் குறிப்பிட்ட பிரதேச செயலாளருக்கு அறிவித்தார். அங்கு உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அவர் கூறுகிறார்.


நேற்று முன்தினம் வியாழனன்று பெற்றோரை அழைத்து விசாரித்ததாக தகவல். பிரதேச செயலக தே.சி.பா.அதிகார சபை அலுவலர்களுக்கும் சிறுவர் நன்னநடத்தை அலுவலர்க்குமிடையே சீரான தொடர்புகள் இன்மையே இதனை தாமதப்படுத்தக் காரணமென்பது தெரிகிறது என அவர் தெரிவித்தார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் அறிவித்தார். எனினும் நேற்று வெள்ளிக்கிழமை பகல் வரை இச்சிறுவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்படவில்லை.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிஜகார சபையின் மாவட்ட இணைப்பாளர் அசாருதீன் நேற்று வெள்ளிக்கிழமை எமது அலுவலகத்திற்கு வந்து இன்று அவர்களை சம்மாந்துறை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்வதாகக் கூறிச்சென்றார்.

இவையெல்லாம் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் எத்துணை பொடுபோக்குத்தனத்தையும் அலட்சியத்தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றது என்று ஸ்ரீகாந் அதிருப்தி வெளியிட்டார்.


24மணிநேரத்துள் துரிதமாகச் செயற்பட வேண்டிய 1929 அவசர தொலைபேசி இலக்கத்திற்குரியவர்கள் ஏன் இந்த தாமதித்த செயற்பாட்டை செய்கிறார்கள்?

அப்படியெனின் பொதுமக்கள் இவ்விலக்கத்திற்கு ஏன் அறிவிக்க வேண்டும் என்று கூறும் அவர், எத்தனை கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், வீதி நாடகங்கள் நடாத்தியும் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் இத்துணை அலட்சியம், இழுத்தடிப்பு இடம்பெறுவதென்பது நல்லாட்சியில் ஜீரணிக்க முடியாதுள்ளது என மேலும் அவர் சீற்றத்துடன் தெரிவித்தார்.

1 2