லண்டனில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைத் தமிழ்க் குடும்பப் பெண் பலி!!

313

SUBAHARI

லண்டனில் வீதியை கடக்க முற்பட்டபோது கார் ஒன்றினால் மோதுண்டு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் இலங்கைத் தமிழ் பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் யாழ்ப்பாணம் வேலணை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரான திருமதி சோதிலிங்கம் சுபஹரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறுக்கிழமை காலை 6 மணியளவில் திருமதி சோதிலிங்கம் மேற்கு ஹென்டன் பகுதியில் இருந்து ரோயல் பார்க் இற்கு வேலைக்குச் செல்வதற்காக A5 வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் மெர்சிடிஸ் ரக காரினால் மோதப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

திருமதி சோதிலிங்கம் கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய போர்க்காலச்சூழ்நிலையில் தனது கணவரையும் பிள்ளைகளையும் இலங்கையில் விட்டு விட்டு லண்டனுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது கணவன் சோதிலிங்கத்தினையும் 18 வயதான மகள் ஹம்சனாவையும் குடும்ப ஒன்றிணைவுத் திட்டத்தின் மூலமாக லண்டனுக்கு அழைத்துள்ளார். இதேவேளை அவரது 22 வயதான மகன் வசந்த் இலங்கையில் கல்வி கற்று வருகின்றார்.

8 வருடங்களுக்குப் பின்னர் மீளவும் ஒன்றிணைந்த திருமதி சோதிலிங்கத்தின் கணவரும் மகளும் இவரது இறப்பினால் மிகவும் துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தினை நேரில்கண்டவர்கள் இருப்பின் தம்முடன் தொடர்புகொள்ளுமாறு லண்டன் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். அதேவேளை 26 வயதான நபர் ஒருவர் இந்த விபத்துக் குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.