தமது அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வவுனியா கற்குளம் மக்களால் இன்று(02.03) ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா கோவில்குளம் சந்தியில் ஒன்று கூடிய 200 இற்கும் மேற்பட்ட மக்கள் வவுனியா மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாகச் சென்று, மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த மக்களை கற்குளம் பிரதேசத்தில் குடியேற்றியபோது சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்த நிலையில் மக்கள் வாழ முடியாத சூழலில் நிரந்தர வீட்டுத்திட்டத்திலும் தாம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்த இம் மக்கள் தமக்கான நிரந்தர வீட்டை வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந் நிலையில் தாம் வாழும் கிராமத்தின் பதிவை உறுதிப்படுத்துங்கள், மக்கள் வசிக்க கூடிய வீடுகளை அமைத்து தாருங்கள், எமது கிராமத்திற்கான வீதிகளை புனரமைத்து தாருங்கள், அபிவிருத்தி திட்டங்களில் எம்மையும் இணைத்து கொள்ளுங்கள் என்ற பதாதைகளையும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.