ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் கலாச்சார அலுவல்கள் ராஜாங்க அமைச்சு ஏற்பாடு செய்த மாபெரும் சமாதான இசை விழா நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராசதுரை அரங்கில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
இசைவிழாவில் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கலாச்சார அமைச்சின் பணிப்பாளர் விஜித் களுகல்ல, உதவி மாவட்ட செயலாளர் கே.ரங்கநாதன், பிரபல பாடகி வனஜா சிறீனிவாசன், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் உட்பட அமைச்சு அதிகாரிகள், கலைஞர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.
அரச இசைக்குழுவினரின் தமிழ், சிங்கள பாடல்கள் பிரபல பாடகர்களால் இசைக்கப்பட்டன. இங்கு உரையாற்றிய அமைச்சர்,
இன்று நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ளது. இன, மத பேதங்களின்றி நாம் சிந்திக்க வேண்டும். ஒரே தாய் மக்களென்ற உணர்வு ஏற்படுகின்றபோது நிச்சயம் அமைதியும் சமாதானமும் தானாகவே மலரும். எவற்றினாலும் சாதிக்க முடியாதவற்றை இசையினால் சாதிக்க முடியும்.
அதனால் தான் புதிய அரசின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்த இத்தயை எந்த இனத்திற்கோ மதத்திற்கோ சொந்தமில்லாத இசை நிகழ்வை நடாத்துகின்றோம் எனத்தெரிவித்தார்.