உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்!!

432

Love

காதல் திருமணங்கள் அதிகமாகிவிட்ட காலகட்டம் இது. இருந்தபோதும், சாத்திரமும், சாதி, சமூக, பொருளாதார அம்சங்களும்தான் திருமணப் பொருத்தத்தின் மிகப் பெரிய அம்சமாக தற்போது உள்ளது.

உங்களுக்கான துணைவரைத் தேடுவதின் முதல் அம்சம் அவருடன் பேசுவதுதான். இதுவே பரஸ்பர புரிதலுக்கான முதற்படி. பேசுவது மட்டுமின்றி சற்றுப் பழகினால் மேலும் நல்லது. தெளிவாகவும் திறந்த மனத்துடனும் பேசுங்கள்.

பேசுவதற்கு மேலாக அவரை நன்கு கவனியுங்கள். மகிழச்சியானவரா, சந்தேகப் பேர்வழியா, சக ஜமாகப் பழகக் கூடியவரா, தெளிவாகத் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்பவரா என ஆராயுங்கள்.

அந்தக் குணாதியசியங்கள் உங்களது குணாதியசியங்களுடன் ஒத்துபோக கூடியதா என்பதை அனுமானித்துக் கொள்ளுங்கள். கலந்து பேசக் கூடியவராக இருப்பது அவசியம். உங்கள் இருவரிடையோ அல்லது குடும்பத்திற்குப் பொதுவானதாகவோ ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அது பற்றிக் கலந்துரையாடி முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பது அவசியம். ஒற்றைப் போக்கில் தானே திடீர் முடிவுகள் எடுப்பராயின் பின்னர் பல பிரச்சனைகள் தோன்றலாம்.

அதே போல உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்சனை சஞ்சலம் போன்றவை ஏற்படுமாயின் அவற்றிக்குக் காது கொடுத்துக் கேட்பராக இருக்க வேண்டும். துயர் மேவி கண்ணீர் சிந்தும்போது தோள் கொடுத்து ஆதரவு அளிப்பவராக இருப்பவராக இருக்க வேண்டும். மனதில் அன்பும் ஆதரவும் நிறைந்தவரா என்பதைக் கண்டறிய முயலுங்கள்.

அவரது குடும்பச் சூழல் எவ்வாறானது. பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் சுமுகமான உறவு இருக்கின்றதா, விட்டுக் கொடுப்புடன் பழகக் கூடிய தன்மையுள்ள குடும்பச் சூலிலிருந்து வந்தவரா போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் விஷயம் முக்கியமானது. குழந்தைகள் வேண்டுமா, எவ்வளவு காலத்தின் பின் வேண்டும் போன்றவற்றில் ஓரளவேனும் புரிந்துணர்வு வேண்டும்.

உங்கள் இருவரிடையேயும் சிற்சில வேறுபாடுகளும் இருப்பதும் வாழ்வைச் சுவார்ஸமாக்கலாம். உணவு, உடை, நிறம் போன்ற பல சாதாரண விடயங்களில் விருப்பு வேறுபாடுகள் இருப்பதானது விட்டுக் கொடுப்பு மனப்பான்மையை வளர்க்க உதவும்.

அத்தோடு தினமும் விடிந்தால் பொழுதுபட்டால் வாழ்க்கை ஒரே விதமாக அமைந்து சலிப்பு அடையாமல் இருப்பதற்கும் உதவும்.

நகைச்சுவை உணர்வு உள்ளவர் விரும்பத்தக்கது. தான் மட்டும் சிரிக்காமல் உங்களையும் சிரிக்க வைக்கக் கூடியவராயின் வாழ்க்கை ஓடம் சிலிர்ப்புடன் மிதந்தோடும்.

புகைப்பவரை அறவே ஒதுக்குங்கள். புகைப்பவராயின் வாழ்க்கைப் பயணத்தில் அரை வழியில் உங்களை விட்டுவிட்டு நோயோடும் மரணத்தோடும் போராடி அவர் விடைபெற நேரலாம் என்பதை மறவாதீர்கள்.

புதிய ஒருவரைப் புரிந்து கொள்வதற்கு ஓரிரு சந்திப்புகள் போதாது. ஒரு சில மாதங்களாவது பழகிய பின்னர் தான் அவர் எப்படிப்பட்டவர் என்று கணிக்க முடியும். அதன் பின்னரே அந்த நட்பு திருமணம் மட்டும் போகலாமா எனத் தீர்மானிக்க முடியும். ஆனால் எமது சமூகச் சூழல் இன்னமும் அந்தளவு பரந்த மனப்பான்மையுடன் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளவே வேண்டும்.

ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தாலே முடிச்சுப் போட்டுப் பேசுவார்கள். தரகர்களும் தாய் தந்தையரும் மட்டுமே பேசி முடிவெடுக்கும் நிலமைதான் பெரும்பாலும் இருக்கிறது. எவ்வாறாயினும் யாராவது உடனடியாக திருமணத்தை முடிக்க வேண்டும் என்று சொன்னால் சற்று பொறுமையாக இருங்கள். சற்றுக் கால அவகாசம் கேட்டு பின் முடிவிற்கு வருவதே நல்லது.

மருத்துவ ரீதியாக மிக நெருங்கிய சொந்தத்தில் மணம் முடிப்பது நல்லதல்ல. பரம்பரை நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.