முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுநேற்று 23.04.2014 வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றது.
இலங்கையில் யுத்தத்தினாலும் , விபத்துக்களாலும் பிறப்பினாலும் , ஏனைய காரணிகளாலும் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டு அவயவங்கள் செயலிழந்துள்ளவர்களுக்கு நாட்டிலேயே முதற் தடவையாக வடமாகாண சபை மாதாந்த உதவி பணக்கொடுப்பனவு திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது.
கழுத்துக்குக் கீழ் செயலிழந்தவர்களுக்கு மாதாந்தம் 3 ஆயிரம் ரூபாவும், இடுப்புக்குக் கீழ் இயங்க முடியாதவர்களுக்கு மாதம் 1,500 ரூபாவும் ஏப்ரல் மாதம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.
தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இந்த மாதாந்த உதவி பணக் கொடுப்பனவின் தொகையை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகளை வடமாகாண சபை விரைவில் மேற்கொள்ளும் என்றும் அவர்கள் தமது தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்வதற்குரிய பயிற்சிகள் மற்றும் உதவிகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.இத்திட்டமானது வடக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய விபத்துக்களினாலும் காயமடைந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக இயங்கமுடியாதவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. வடக்கு மாகாண சபை பொறுப்பேற்கப்பட்ட பின்னர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட பராமரிப்பு நிலையம் வவுனியா பம்பைமடு ஆயர்வேத வைத்தியசாலை வளாகத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.