கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கிலும் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கிலும் நடைபெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் முதல் இரண்டு தினங்களில் சாதனைகள் பல நிலைநாட்டப்பட்டுள்ளன.
தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்குட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் வேகநடைப் போட்டியை 28 நிமிடங்கள் 31.03 செக்கன்களில் நிறைவு செய்த வவுனியா மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைச் சேர்ந்த கே.கனகேஸ்வரி புதிய சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சூடினார்.
மேலும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு..
ஆர்.ரமா (20இன் கீழ் பெண்கள் 1000 மீ. வேக நடை 1நி. 09.27.28 செக்)
ஆர்.தர்ஷிகா (23இன் கீழ் பெண்கள் சம்மட்டி எறிதல் 23.17 மீற்றர்)
சி.ஜேனோசன் (20இன் கீழ் ஆண்கள் சம்மட்டி எறிதல் 29.19 மீற்றர்)
ஆகியோர் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்.
மேலும்..
ஐ.மேரி கொன்சலா (16இன் கீழ் பெண்கள் 3000 மீ. வேகநடை 19 நி. 05.03 செக்.)
பீ.தர்ஷிகா (18இன் கீழ் பெண்கள் 5000 மீ. வேகநடை 35 நி. 52.89 செக்.)
கே.கோகிலவாணி (23இன் கீழ் 10000 மீ. 1 நி. 00.38.96 செக்.)
ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர்.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வலல்ல ஏ. ரட்நாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹர்ஷனி மற்றும் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த ஜெ. அனிதா ஆகிய இருவரும் 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாதனைகளை நிலைநாட்டினர்.
எனினும் ஒரே தாவலில் 3.10 மீற்றர் உயரத்தைத் தாவிய ஹர்ஷனி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்ததுடன் அந்த சாதனை அவருக்கு சொந்தமானது. இரண்டாவது முயற்சியில் அனிதா இந்த உயரத்தைத் தாவியதால் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுக்க நேரிட்டது.
இதேவேளை 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலிலும் அளவெட்டி அருணோதயா கல்லூரியின் நெப்தலி ஜொய்சன், தெல்லிப்பழை மகாஜனாவின் எஸ். டிலக்சன் ஆகிய இருவரும் 4.20 மீற்றர் உயரம் தாவி புதிய சாதனையை நிலைநாட்டினர்.
எனினும் குறைந்த முயற்சி அப்படையில் நெப்தலி ஜொய்சனுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
இதே போட்டியில் மகாஜனா வீரர் எஸ். தினேஷ் (3.70 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
பெண்களுக்கான 18 வயதுக்குட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் 2.70 மீற்றர் உயரம் தாவிய தெல்லிப்பளை மகாஜனா வீராங்கனை டிலானி ஸ்ரீஸ்கந்தராஜா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
கதிர்காமம் துட்டுகெமுனு வித்தியாலயத்தைச் சேர்ந்த எம். சி. தமயந்தியினால் 2011இல் நிலைநாட்டப்பட்ட 29 நிமிடங்கள் 55.88 செக்கன்கள் என்ற சாதனையையே கனகேஸ்வரி முறியடித்துள்ளார்.
ஆண்களுக்கான 10000 மீற்றர் வேக நடைப் போட்டியை 58 நிமிடங்கள் 57.68 செக்கன்களில் நிறைவு செய்த இதே மாவட்டத்தைச் சேர்ந்த கே. ரசிஹரன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதன் பிரகாரம் முதல் இரண்டு தினங்களில் மொத்தம் பத்து சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன.
தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முப்பாய்ச்சலில் நீர்கொழும்பு நியூஸ்டெட் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த விதூஷா லக்மாலி 13.12 மீற்றர் தூரம் பாய்ந்து தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார்.
அத்துடன் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முப்பாய்ச்சலிலும் விமானப்படையைச் சேர்ந்த எஸ். துலாஞ்சலி 12.76 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.