பாலியல் குற்றச்சாட்டு : இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் மூவர் பதவி நீக்கம்!!

299

cc

இலங்கை கிரிக்கெட் மகளிர் அணி பாலியல் லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மூன்று அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாலியல் லஞ்சம் தொடர்பில் நடத்தப்பட்ட உள்ளக விசாரணையில் மூவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மூன்று நபர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதியளவு ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர்களை பதவி நீக்கம் செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் சேர வீராங்கனைகளிடம் அதிகாரிகள் பாலியல் லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாக விசாரணைக் குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை விசாரிக்க கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நிமல் திஸ்சநாயக தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் விசாரணையில் மகளிர் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் பலர், வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.