யாழ்.நாரந்தனை வடமேற்கு தம்பிரான் தோட்டம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு- பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரினால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இந்த வன்கொடுமை சம்பவத்தையடுத்து தீவகத்தில் மீண்டும் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
தம்பிரான் தோட்டம் ஜே.56 கிராமசேவகர் பிரிவில் உள்ள மேற்படி சிறுமியின் தந்தை மறுமணம் முடித்த நிலையில், தாயாரும் மறுமணம் முடித்து தற்போது அரபு நாடு ஒன்றில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் மேற்படி வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சிறுமி தற்போதும் அம்மம்மாவுடன் தங்கியிருந்த நிலையில், இந்த வன்கொடுமை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் வலைவிரித்து தேடி வருவதாகவும் அவர் தற்போது தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக கிராமசேவகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமையினை உறுதிப்படுத்தியதுடன் விடயம் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
13 வயதான மேற்படி சிறுமியின் பலாத்காரம் தொடர்பில் கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறுவர் நீதிமன்றத்திற்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில், குறித்த சிறுமி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன் போது வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே பிரமந்தனாறை சேர்ந்த ஜோன் குமண்ஸன் என்பவர் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.