வங்கதேசம் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கெளதம் மீது சில வங்கதேச ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதைப் பார்ப்பதற்காக சச்சின் அதிதீவிர ரசிகரான சுதிர் கெளதம் வங்கதேசம் சென்றுள்ளார்.
இந்திய அணிக்கு ஆதரவாக மிர்பூர் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் உடல் முழுக்க இந்திய மூவர்ணத்தைப் பூசிக் கொண்டு தேசியக் கொடியுடன் மைதானத்தில் வலம் வந்தார்.
இந்நிலையில் டாக்காவில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து வங்கதேச ரசிகர்கள் சிலர் சுதிர் கெளதம் சென்ற ஆட்டோவை வழிமறித்து, அவர் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், சுதிர் கௌதமை வன்முறை கும்பலிடம் இருந்து மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர். இதனால் சிறிய அளவிலான காயங்களுடன் சுதிர் உயிர் தப்பினார்.