பங்களாதேஷ் அணிக்கெதிரான 3 ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதலாவது விக்கெட் 39 ஓட்டங்களுக்கு இழக்கப்பட்டது.
சிற்பபாக துடுப்பெடுத்தாடிய ஷீக்கர் தவான் 75 ஓட்டங்களையும் அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி 69 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடர்ந்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு 44 ஓட்டங்களையும் சுரேஸ் ரெய்னா 38 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
இறுதியாக 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்களை இந்திய அணி பெற்றுக்கொண்டது.
மஸ்ரபி மோர்தஸா மூன்று விக்கெட்டுக்களையும் முஸ்தபீசூர் ரஹ்மான் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
318 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி வீரர்கள் இந்திய அணியின் சூழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் நெருக்கடியை எதிர்நோக்கினர்
போட்டியின் இறுதியில் பங்களாதேஷ் அணி 47 ஓவர்களில் 240 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.
ஷபீர் ரஹ்மான் 43 ஓட்டங்களையும் சௌமியா சர்கார் 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
சுரேஸ் ரெய்னா மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் மற்றும் தவல் குல்கர்னி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் சிறப்பாட்டகாரராக சுரேஸ் ரெய்னா தெரிவுசெய்யப்பட்டார்.
எனினும் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி ஏற்கனவே வெற்றிகொண்டு வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.