எகிப்திய கெய்ரோ நகரின் வடக்கே நைல் நதியில் படகொன்றில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற திருமண நிச்சயதார்த்த வைபவத்தின் போது, அந்தப் படகு சரக்குக் கப்பலொன்றுடன் மோதியதில் அதில் பயணம் செய்த குறைந்தது 21 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்படி படகில் பயணித்த 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதேசமயம் குறைந்தது 6 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி இருள் காரணமாக தாமதமடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பலியானவர்களில் குறைந்தது இரு சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.
இளம் ஜோடியொன்றின் திருமண நிச்சயதார்த்தத்தைக் கொண்டாட அந்த ஜோடியின் குடும்பத்தினரும் நண்பர்களும் குறிப்பிட்ட படகை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஜோடிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் சரக்குக் கப்பலின் கப்டனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.