வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீரபுரத்தில் உள்ள அரசடிகுளம் என்னும் சிறிய கிராமத்தில் தற்போது நான்கைந்து வறிய குடும்பங்களை சேர்ந்த ஐந்தாறு பெண்கள் துணிகளுக்கு பற்றிக் போடுகின்ற வேலையினை தமது சுய தொழிலாக செய்து வருகின்றனர்.
மேற்படி குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மிகவும் வறிய நிலையில் பற்றிக் கைத்தொழிலை செய்துவருகின்றனர் . தாங்கள் பிரதேச செயலகத்தின் உதவியுடன் பெற்றுக்கொண்ட பற்றிக் கைத்தொழில் தொடர்பான பயிற்சியை முடித்து கொண்டு சிறியளவில் இக்கைதொழிலை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர் .
இந்த பற்றிக் கைத்தொழிலை வினைத்திறனாக செய்து ஒரு நிரந்தர வருமானத்தை அல்லது தங்களது வாழ்கை தரத்தை உயர்த்துவதற்கு போதுமான உதவிகள் இல்லாமல் அல்லல்படுவதாக தெரிவிக்கின்றனர்.
மேற்படி சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் தங்களுக்கென உரிய வீட்டு வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் ஏதுமின்றியும் தங்களது தொழிலை தொடர்ந்து செய்வதற்கு ஏதுவான உட்கட்டமைப்பு வசதிகள் எதுவுமற்ற நிலையில் தாங்கள் ஓலை குடிசைகளிலே தான் இந்த பற்றிக் கைத்தொழிலை தமது சீவியத்துக்காக சிறியளவில் மேற்கொண்டு வருகின்றனர் .
தாம் இந்த பற்றிக் கைத்தொழிலை பெரியளவில் செய்வதற்க்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உள்ளீடுகள் என்பவற்றை பெற்றுகொள்வதற்கும் உதவிகள் வழங்கும் படியும் தொடர்ந்து தயார் செய்யப்பட்ட பற்றிக் துணிகளை நல்லவிலையில் சந்தைபடுத்துவதற்கும் உரிய வசதிகள் செய்து தரும் படியும் வேண்டுகின்றனர் .
அரசடிகுளம் கிராமத்தில் உதயமாகியுள்ள இந்த பற்றிக் கைத்தொழிலினை தொடர்ந்தும் அபிவிருத்தி செய்து அங்குள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து உரிய நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படவேண்டும் என வவுனியா நெற் இணையமூடாக சுட்டிக்காட்ட முனைகிறது .
வவுனியா நெற் செய்திகளுக்காக செட்டிகுளம் பிரதேச நிருபர்