இலங்கை – இந்திய டெஸ்ட் போட்டியில் மோதலில் ஈடுபட்ட இலங்கை அணியின் சந்திமாலுக்கு ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கும் இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கும் ஐ.சி.சி தடைவிதித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா மற்றும் இலங்கை வீரர் தம்மிக்க பிரசாத் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பிரசாத்துக்கு ஆதரவாக சந்திமால் மற்றும் திரிமன்னே ஆகியோர் இஷாந்த் ஷர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஐ.சி.சி.யின் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இஷாந்த் சர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் சந்திமாலுக்கு ஒரு ஒருநாள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தம்மிக்க பிரசாத் மற்றும் திரிமன்னே ஆகியோருக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 50 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இஷாந்த் சர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக இஷாந்த சர்மாவுக்கு போட்டிக்கட்டணத்திலிருந்து 65 வீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தமைக்காக திரிமன்னேக்கு போட்டிக்கட்டணத்திலிருந்து 30 வீதம் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.