யேமனிய தலைநகர் சனாவிலுள்ள பள்ளிவாசலொன்றில் புதன்கிழமை இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 32 பேர் பலியானதுடன் 92 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றி விட்டு மக்கள் வெளியேறிக் கொண்டிருந்த வேளை அவர்கள் மத்தியில் பிரவேசித்து தற்கொலைக் குண்டுதாரியொருவர் குண்டை வெடிக்க வைத்துள்ளார்.
இந்தக் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு உதவும் முகமாக அங்கு மக்கள் கூடிய வேளை, காரொன்றைச் செலுத்தி வந்த தற்கொலைக் குண்டுதாரியொருவர் குண்டை வெடிக்க வைத்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாமே இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.அன்றைய தினம் வட யேமனில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த இரு உள்ளூர் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாகனமொன்றில் வந்த துப்பாக்கிதாரியொருவர் அந்த இரு பணியாளர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தாக்குதல் நடத்தப்பட்ட பள்ளிவாசல் ஹோதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்துள்ளது.
கடந்த மார்ச் மாத இறுதியில் ஹோதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி தலைமையிலான கூட்டமைப்பு நாடுகளின் படையினர் வான் தாக்குதல்களை ஆரம்பித்தது முதற்கொண்டு அந்நாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளன.