இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், டிவிலியர்ஸ் மற்றும் டுமினியின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது தென்னாபிரிக்கா.
இந்தியாவின் இமாச்சல பிரதேச தர்மசாலாவில் இந்தியா –- தென்னாபிரிக்க அணிகள் மோதிய முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் இந்தியாவைத் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய ரோஹித் ஷர்மா 66 பந்துகளில் 106 ஓட்டங்களை விளாசி அசத்தினார். தவான் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். விராட் கோஹ்லி 43 ஓட்டங்களை விளாசினார். அணித் தலைவர் டோனி ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றார். இறுதியில் இந்தியா 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 199 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிகொண்டது.
தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக அம்லா மற்றும் அதிரடி வீரர் டிவிலியர்ஸ் களமிறங்கினர்.
வந்த வேகத்திலேயே இருவரும் அதிரடியில் இறங்கினார். இதனால் தென்னாபிரிக்க அணி 5 ஓவர்கள் முடிவில் 60 ஓட்டங்களைப் பெற்றது. இந்நேரத்தில் அம்லா 36 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.
அதன்பிறகு டுபிளஸிஸ் களமிறங்கினார். அவரும் வந்தவேகத்திலேயே 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பிறகு டுமினி களமிறங்கினார்.முறுமுனையில் அதிரடியைத் தொடர்ந்துகொண்டிருந்த டிவிலியர்ஸ் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டுமினியுடன் ஜோடி சேர்ந்தார் பெஹார்தின். இருவரும் அபாரமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.
இறுதியில் 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களைப் பெற்று, இந்தியாவை சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது தென்னாபிரிக்கா.
டுமினி 68 ஓட்டங்களுடனும், பெஹார்தின் 32 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். போட்டியின் நாயகனாக டுமினி தெரிவுசெய்யப்பட்டார்.