எகிப்து நாட்டில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து 200-க்கும் அதிகமான பயணிகளுடன் ரஷ்யா நோக்கி சென்று கொண்டிருந்த ரஷிய நாட்டு விமானம் துருக்கி நாட்டு வான்வெளியில் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வான்வெளியில் எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கடலை ஒட்டியுள்ள கடற்கரை நகரமான ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து திரும்பிய அந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ரஷிய நாட்டு சுற்றுலா பயணிகள் என தெரியவந்துள்ளது.
ரஷிய அரசால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட அந்த தனியார் விமானத்தில் 217 பயணிகளும் விமானிகள் உள்பட 7 பணியாளர்கள் இருந்ததாகவும் ரஷியாவின் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தை எகிப்து பிரதமரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, எகிப்து பிரதமர் ஷரிப் இஸ்மாயில் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய சினாய் பகுதியில் ரஷிய பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டுள்ளது.